தமிழரசுக்கட்சியின் மாநாட்டை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதென வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. அம் மாநாட்டில் புதிய நிர்வாகமும் தெரிவுசெய்யப்படவுள்ளது. மாநாடு நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக சுமந்திரன் தெரிவுசெய்யப்படலாம். அதற்கான நகர்வுகளையே பல நாட்களாக சுமந்திரன் செய்துகொண்டு வருகின்றார். இதற்காக அவர் கிழக்கிலிருந்து வடக்காக வியூகத்தை அமைத்து செயற்பட்டு வருகின்றார்.
பொதுக்குழுவில் கிழக்கின் பெரும்பான்மை சுமந்திரனுக்குக் கிடைக்கும். மட்டக்களப்பு மாவட்டமும் , திருகோணமலை மாவட்டமும் அவரது செல்வாக்கின் கீழேயே உள்ளது. அம்பாறை மாவட்டமும் பெரியளவிற்கு விலகிச் செல்லாது. யாழ்ப்பாண மாவட்டத்திலும் உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்களாக இருப்பதால் பெரும்பான்மை கிடைக்கலாம். ஏனைய மாவட்டங்களில் வாய்ப்புக்கள் குறைவு. கிளிநொச்சி மாவட்டத்தில் அறவே இல்லை எனலாம்.
போட்டியாளர்களாக மாவையும் சிறீதரனும் இறங்கக் கூடும். சில வேளை சட்டத்தரணி தவராசாவும் இறங்கலாம். கிழக்கின் பாரம்பரிய கட்சிக்காரர்கள் மாவையை ஆதரிக்கலாம். ஏனைய வேட்பாளர்களுக்கும் சுமந்திரனுக்கும் இடையே இடைவெளி அதிகம் என்பதால் வாய்ப்புக்கள் சுமந்திரனுக்கே உண்டு. சுமந்திரன் எப்போதும் இயங்கு நிலை அரசியல்வாதியாக இருப்பதும் , சர்வதேச தொடர்புகளை அதிகம் கொண்டிருப்பதும், ஊடகங்களின் கவனிப்புக்குரியவராக இருப்பதும் தமிழ் மத்தியதர வர்க்கத்தினரிடையே அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. யாழ்ப்பான மத்தியதர வர்க்கத்தினரின் கருத்து ‘சுமந்திரனை விட்டால் கட்சியில் வேறு யார் இருக்கினம்’ என்பதே.
தலைவர், செயலாளர் பதவிகளில் ஒரு பதவி வடக்கிற்கு வழங்கினால் மற்றைய பதவியை கிழக்கிற்கு வழங்குவதே தமிழரசுக்கட்சியின் மரபாகும். இதனடிப்படையிலேயே துரைராசசிங்கம் கட்சியின் செயலாளராக பணியாற்றினார். அவரது பதவி விலகலின் பின்னர் மருத்துவர் சத்தியலிங்கம் தற்காலிக செயலாளராகவே உள்ளார். சாணக்கியனின் பாட்டனார் இராசமாணிக்கம் முன்னர் தலைவராக பதவிவகித்தார். இந்தத் தடவை செயலாளர் பதவி சிலவேளை சாணக்கியனுக்கு கிடைக்கலாம். அது சாணக்கியனுக்குக் கிடைத்தால் சுமந்திரனின் பாதை முழுமையாக சுத்தமாகி விடும். சாணக்கியன் சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே இருக்கின்றார்.
சாணக்கியனுக்கு கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் புலம் பெயர் நாடுகளிலும் ஆதரவு உண்டு. கிழக்கில் தமிழ்த் தேசியத்தை தக்கவைத்திருப்பது சாணக்கியன் தான் என்பது தமிழ் மக்களின் பொதுவான கருத்து. வயதில் குறைந்தவராக துணிந்து முன்னே செல்லும் போராட்ட அரசியல்வாதியாக , மும்மொழி வல்லுனராக, இராசமாணிக்கத்தின் பேரனாக அவர் விளங்குவது அவரது ஆதரவுத்தளத்தை வெகுவாக உயர்த்தியுள்ளது.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் ‘நிச்சயமாக நாம் பாற்சோறு உண்ண மாட்டோம்’ என சாணக்கியன் துணிந்து கூறியமை தமிழர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நண்பர் ஒருவர் ‘அரிவாளை சரியாக சாணக்கியன் போட்டிருக்கின்றார்’ என பாராட்டியிருக்கின்றார்.
ஆளுமைத்திறனில் கிழக்கின் ஏனைய தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கும் சாணக்கியனுக்கும் இடையே இடைவெளி அதிகம். இராஜதுரை முன்னர் கிழக்கில் கோலேச்சியது போல சாணக்கியன் தற்போது கோலோச்சுகின்றார். இது விடயத்தில் சாணக்கியனின் ஆளுமை இராஜதுரையை விட அதிகம் எனலாம். சாணக்கியனைப் போல மும்மொழி ஆற்றல் இராஜதுரையிடம் இருக்கவில்லை எனினும் அடுக்கு மொழி பேச்சாளர் என்ற வகையில் இராஜதுரைக்கும் தமிழ் உலகம் எங்கும் ஒரு கௌரவம் இருந்தது. இராஜதுரையின் பேச்சைக் கேட்பதற்கென்றே அலைபாயும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்தது.
தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியை கைப்பற்றுவது சுமந்திரனின் தற்காலிக இலக்கே ஒழிய, நிரந்தர இலக்கு அல்ல. நிரந்தர இலக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை மீளப் புனரமைத்து அதற்கு தலைவராவதே, இதன் பின்னர் தான் தமிழ் மக்களின் தலைவர் என்ற பெயர் அவருக்கு கிடைக்கும். மேற்குலகம் அவ்வாறான ஒரு நிலையில் சுமந்திரன் இருப்பதையே விரும்புகின்றது.
தமிழரசுக் கட்சிக்கு தலைவராக வராமல் தடியூன்றி பாய்ந்து கூட்டமைப்புக்கு தலைவராக முடியாது. கூட்டமைப்பில் வலுவான இருப்பு தமிழரசுக் கட்சிக்குத்தான் உண்டு. மரபுரீதியான கட்சியாக இருப்பதும், வடக்கு – கிழக்கு முகம் கொண்ட ஒரேயொரு கட்சியாக இருப்பதும் இதற்குக் காரணம். கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் தனித்து இருப்புக்கொண்ட கட்சிகளல்ல. அவை சார்பு நிலைக்கட்சிகளே. தனித்து போட்டியிடின் அக்கட்சிகளில் இருந்து எவரும் வெல்லக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
ஏனைய கட்சிகளை மீண்டும் கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக சுமந்திரனும் முயற்சி செய்து வருகின்றார். ஏனைய கட்சிகளையும் தமிழரசுக் கட்சியின் மாவை பிரிவையும் இணைத்து ஒரு அணியை வளர்ப்பதற்கு இந்தியா மிகவும் முயற்சி செய்தது. விக்னேஸ்வரனையும் ஒருவராக இவ்வணியில் இணைத்த போதும் இந்தியாவுக்கு தோல்வியே கிடைத்தது.
இன்னொரு பக்கத்தில் கூட்டமைப்பின் கட்சிகள் பிரிந்திருப்பது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செல்வாக்கை உயர்த்தியிருந்தது. தொடர்ச்சியாக அடையாளப் போராட்டங்களை முன்னணி நடத்துவதும் ‘அவர்கள் மட்டுமே போராடுகின்றனர்’ என்ற விம்பத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. எனவே, முன்னணியின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமாயின் ஏனைய கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. தனித்த அரசியலை விட ஒருங்கிணைந்த அரசியலுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் செல்வாக்கு உண்டு.
சுமந்திரனுக்கு சவாலான விடயம் பிரக்ஞை பூர்வ தமிழ்த்தேசிய சக்திகளின் ஆதரவும் இந்திய அரசின் ஆதரவும் அவருக்கு இல்லாமையே. பிரக்ஞைபூர்வ தமிழ்த்தேசிய சக்திகள் இரண்டு குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் மீது முன்வைக்கின்றனர். அதில் முதலாவது சுமந்திரன் இறைமை அரசியலை அல்ல, அடையாள அரசியலையே முன்னெடுக்கின்றார் என்பதாகும். அடையாள அரசியல் பாரபட்சத்துடன் தொடர்புடையது. இறைமை அரசியல் கட்சி அதிகாரத்துடன் தொடர்புடையது. அடையாள அரசியலுக்கு சோல்பரி யாப்பின் 29 ஆவது பிரிவே போதுமானது. சமஸ்டி ஆட்சி எல்லாம் தேவையற்றது.
‘தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பது அழிக்கப்படுவதே இனப்பிரச்சினை’ என்ற புரிதலும் சுமந்திரனிடத்தில் இல்லை. மேற்குலக சக்திகளும், தென்னிலங்கையின் லிபரல்களும் அடையாள அரசியலைத் தான் விரும்புகின்றன. தமிழ் மக்களின் இறைமை அரசியலை அவர்கள் ஏற்கவில்லை. மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலும், தென்னிலங்கை லிபரல்களின் நிகழ்சிநிரலும் அடையாள அரசியலுக்கு உரியதே ஒழிய இறைமை அரசியலுக்குரியதல்ல. இத் தரப்புகளின் நிகழ்ச்சி நிரலை நகர்த்தும் சுமந்திரனால் ஒரு போதும் இறைமை அரசியலை முன்னெடுக்க முடியாது என்பது தமிழ்த்தேசியர்களின் வாதம்.
2009 இல் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை காலம் பின்பற்றிய அரசியலை ஏதோ ஒரு வகையில் முன்கொண்டு செல்வதா? அல்லது அதனைக் கைவிட்டு விட்டு இணக்க அரசியலை முன்னெடுப்பதா? என்ற விவாதம் எழுந்தது. அதன் போது சம்பந்தனும், சுமந்திரனும் இணக்க அரசிலை முன்னெடுப்பது என்ற தீர்மானத்திற்கே வந்தனர்.
சுருக்கமாகக் கூறுவதாயின் ‘டக்ளஸ் நம்பர் ரூ’ என்ற நிலையை எடுக்க முற்பட்டனர். டக்ளஸ் தேவானந்தா நேரடியாக இணக்க அரசியலைச் செய்தார். இவர்கள் மறைமுகமாக இணக்க அரசியலை செய்ய முற்பட்டனர். இந்த இணக்க அரசியல் காரணமாகத்தான் சம்பந்தனுக்கு சொகுசு வீடு வாழ்நாள் வரை கொழும்பில் கிடைத்தது. சம்பந்தனும் அதற்கு நன்றிக்கடனாக சிங்கக் கொடியை உயர்த்தி ஆட்டினார்.
இணக்க அரசியல் என்ற தீர்மானத்திற்கு வந்த பின்னர் கட்சியையும், மக்களையும் அதற்குள் கொண்டுவர சம்பந்தனும், சுமந்திரனும் முயற்சித்தனர். மறுபக்கத்தில் புலம்பெயர் தரப்பும் முன்னணியும் தமிழ்த்தேசிய அரசியலில் உறுதியாக நின்றதால் மக்களை மாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. மறுபக்கத்தில் இணக்க அரசியலினால் எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை. நாவற்குழியிலும் தையிட்டியிலும் விகாரைகள் கட்டப்பட்ட போது நேரடி இணக்க அரசியல்காரர்களினாலும், மறைமுக இணக்க அரசியல்காரர்களினாலும் அதனைத் தடுக்க முடியவில்லை.
சுமந்திரனின் இணக்க அரசியல் காரணமாக தமிழ்த்தேசிய அரசியலுக்குள் சுமந்திரன் இல்லை. அதற்கு வெளியில் தான் அவர் நிற்கின்றார் என்ற வாதம் தமிழ்த்தேசியர்களினால் முன்வைக்கப்படுகின்றது. இதன் சுருக்கம் ‘தமிழ் மக்களுக்கான அரசியலை அவர் நகர்த்தவில்லை என்பதே’
இரண்டாவது குற்றச்சாட்டு நிகழ்ச்சி நிரல் தொடர்பானது. தமிழ் அரசியலின் மரபு ரீதியான அணுகுமுறை தமிழ் மக்களுக்கான அரசியலை தெளிவாக வரையறுத்து அதற்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதே.தமிழரசுக்கட்சியும் அதன் பின்னரான தமிழர் விடுதலைக் கூட்டணியும் 1983 வரை இவ்வாறான நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்தன.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளும் அதனையே முன்னெடுத்தனர் என்பது வரலாறு. புலிகள் அல்லாத ஏனைய விடுதலை இயக்கங்களும் 1987 ஆம் ஆண்டு இலங்கை -– இந்திய ஒப்பந்தம் வரை அதனையே முன்னெடுத்தனர். இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் அவை இந்திய, இலங்கை நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தன என்பது வேறு கதை.
சுமந்திரன் தமிழ் மக்களின் அரசியல் இலக்கை வரையறுத்து அதற்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை. மாறாக மேற்குலகத்தினதும் சிங்கள லிபரல்களினதும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றார் என்ற வாதத்தை தமிழ்த்தேசியர்கள் முன்வைக்கின்றனர்.
சிங்கள தேசத்தில் தூய்மையான லிபரல்கள் என எவருமில்லை. பெருந்தேசியவாத லிபரல்களே உள்ளனர். நெருக்கடிகள் வரும் போது பெருந்தேசியவாதம் பக்கம் நிற்பது என்பதே அவர்களது வரலாறு. சிங்கள லிபரல்கள் மட்டுமல்ல சிங்கள இடதுசாரிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அமெரிக்காவின் முன்னைய செல்லப்பிள்ளையான ஜே.ஆர்.ஜயவர்தன தொடக்கம் தற்போதைய செல்லப்பிள்ளையான ஜே.ஆரின் மருமகன் ரணில் வரை இதுவே வரலாறு.
ரணில் விக்கிரமசிங்க இதற்கு நல்ல உதாரணம். அவரை உலகம் சிங்கள சமூகத்தில் உள்ள மிகப்பெரும் லிபரல்வாதியாகவே கருதுகின்றது. அவர் தான் சந்திரிக்காவின் தீர்வுப்பொதி பாராளுமன்றத்தில் கிழித்தெறிவதற்கு காரணமாக இருந்தார். தற்போது சர்வதேச விசாரணை ஒரு போதும் நடக்காது எனக் கூறுகின்றார். மனித உரிமை விவகாரத்தில் ‘இஸ்ரேலுக்கு ஒரு நீதி இலங்கைக்கு ஒரு நீதியா? என மேற்குலகத்தை கேட்கின்றார். இடதுசாரிகளில் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடக்கம் வாசுதேவநாணயக்காரா வரை வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே.
இரண்டாவது, இந்தியா சுமந்திரனோடு இல்லை. அவர் மேற்குலக விசுவாசி என்பதே இதற்குக் காரணம். இந்தியா மேற்குலகத்தோடு சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க ஒருங்கிணைந்து செயற்பட்டாலும் தென்னாசியாவிற்குள் மேற்குலகின் ஆதிக்கத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. இந்தியா நண்பர்களை எதிர்பார்ப்பதில்லை எடுபிடிகளையே எதிர்பார்க்கின்றது. சுமந்திரனின் ஆளுமை எடுபிடியாக இருப்பதை ஒரு போதும் அனுமதிக்காது.
ஒரு மூத்த பத்திரிகையாளர் ‘இந்தியாவுடன் எடுபிடியாக இருக்க முடியுமே தவிர நண்பராக இருக்க முடியாது’ என ஒரு தடவை கூறினார். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு சுமந்திரன் ஒரு போதும் தயாராக இருந்ததில்லை. பெருந்தேசியவாதம் விரும்பாது என்பதும் சுமந்திரன் இந்தியாவுடன் நெருங்கிச் செல்லாமைக்கு ஒரு காரணம்.
இப்போது எழும் கேள்வி எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதே. இந்திய விசுவாசிகளும், மேற்குலக விசுவாசிகளும் விரைவில் ஒரு தற்காலிக சமரசத்திற்கு வருவர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீளப்புனரமைக்கப்படும். சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் பின்னர் கூட்டமைப்பின் தலைவராகவும் கட்டாயம் வருவார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்பில் ஒரு போதும் இணையாது. இந்திய விசுவாசிகளும், மேற்குலக விசுவாசிகளும் இறைமை அரசியலை ஒரு போதும் முன்னெடுக்கப்போவதில்லை தமிழ்த்தேசியர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு கொடுப்பர். புலம்பெயர் தரப்பின் தீவிர தமிழ்த்தேசியர்களும் முன்னணியோடு நிற்க வே முனைவர் இரு கட்சிமுறை ஒரு போக்காக வளரும்.மீண்டும் கூட்டமைப்பினதும், முன்னணியினதும் போட்டிக்களமாகவே தமிழ் அரசியல் இருக்கப்போகின்றது.
சி.அ.யோதிலிங்கம்