உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின் 7 கோரிக்கைகளுக்கு விரைவில் பதில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்துள்ள 7 கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசித்து விரைவில் பதிலளிக்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்துள்ள 7 கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

கூடிய விரைவில் எமது பதிலை வழங்க எதிர்பார்த்துள்ளோம். சுயாதீன மேன்முறையீட்டு அலுவலகம் தொடர்பில் இதற்கு முன்னரும் நீதி அமைச்சர் உள்ளிட்டோரின் தலையீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்டவையும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

எனவே அமைச்சரவையில் கலந்தாலோசித்து இவை குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும். அவற்றில் வெளிப்படுத்தப்படும் உண்மைகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.