கிழக்கில் தனியார் பஸ் சேவைக்கு புதிய நடத்தை விதிமுறை

திருகோணமலை – புல்மோட்டை வீதியில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் புதன்கிழமை (05) புதன்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தரமான பயணிகள் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நடத்தை விதிமுறை தொடர்பாக தவிசாளர் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி விரிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதன்படி, பயணிகளின் பாதுகாப்பை முதன்மை பொறுப்பாகக் கொண்டு செயற்படுதல், அனுமதிப்பத்திரம் பெற்ற திறமையான சாரதிகள் மற்றும் நடத்துனர்களை நியமித்தல், அதிக வேகம், போட்டி ஓட்டம் மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டத்தைத் தவிர்த்தல், வாகனங்களின் இயந்திர நிலை, பிரேக், டயர், விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பராமரித்தல் ஆகியவற்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வழங்கப்பட்ட பாதை அனுமதிப்பத்திரம் மற்றும் நேர அட்டவணையை மதித்து சேவையாற்றுதல், பயணிகளுக்கு தேவையற்ற தாமதம் ஏற்படுத்தாமல் செயற்படுதல் மற்றும் ஒரே பாதையில் சேவையாற்றும் அனைத்து உரிமையாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

பயணிகளுடன் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல், பயணிகளின் முறைப்பாடுகளுக்கு பொறுப்புடன் தீர்வு காணுதல் என்பனவும் வலியுறுத்தப்பட்டன.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே அறவிடுதல், பயணச்சீட்டு வழங்கும் நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுதல் மற்றும் சட்டவிரோதமான கட்டண வசூல்களை முற்றாகத் தவிர்த்தல் தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் தொழில் ஒழுக்கத்தைப் பேணுதல், பயணிகளுடன் வாக்குவாதம் அல்லது அநாகரிகமான நடத்தையில் ஈடுபடாமல் இருத்தல், போதைப்பொருள் அல்லது மதுபோதையில் கடமையாற்றுவதை அனுமதிக்கக்கூடாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுதல், ஆய்வுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சேவை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், தேவையான தகவல்களை நேர்மையாக சமர்ப்பித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில் டிஜிட்டல் டிக்கெட் முறை, GPS கண்காணிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து நடைமுறைகளை ஊக்குவித்தல், “கிளீன் ஸ்ரீ லங்கா” வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குதல், மண்ணெண்ணெய் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்தல் மற்றும் பயணிகளின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சேவையை மேம்படுத்துதல் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பஸ் சேவை என்பது வெறும் வணிக நடவடிக்கை மட்டுமல்லாது ஒரு பொது சேவை என்பதையும் உணர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தவிசாளர், அவசர காலங்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சமூகத் தேவைகளின் போது போக்குவரத்து சேவையாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போக்குவரத்துத் துறையின் ஒழுங்குபடுத்தல், அபிவிருத்தி மற்றும் சேவை மேம்பாட்டு நடவடிக்கைகளை கிழக்கு மாகாணத்திலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து பஸ் உரிமையாளர்களின் முழுமையான ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் திருகோணமலை – புல்மோட்டை வீதியில் சேவையாற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.