டெங்கு நோய்த் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்டில் அடுத்தடுத்து நிகழும் முக்கியஸ்தர்களின் மர்ம மரணங்கள் தொடர்பான உண்மையை இந்த அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் சாகர காரிவசம் குற்றம் சுமத்தினார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் டெங்கு தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த வருடத்தில் இதுவரையான நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு நகரம் இன்று கழிவகற்றல் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. வீதிகள் எங்கும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தின் தோல்வியே இவற்றிற்கு காரணம்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் டெங்கு நோய்த் தொற்று மற்றும் கோவிட் பெருந்தொற்று என்பன சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டன.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நோய்க்கட்டுப்படுத்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பலர் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.
கபில சந்திரசேன மற்றும் திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான சாட்சியாளராக இருந்த ரங்க ராஜபக்ச உள்ளிட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான நிலையில், தற்போது முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்திருக்கின்றார்.
இது தொடர்பான சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைக் காரணம் நாட்டுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





