கடற்றொழில் வளங்களின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் மீனவ மக்களின் வருமான மட்டத்தை மேம்படுத்துவதற்காக சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில் வெள்ளிக்கிழமை( 06) மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடற்றொழில் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மீனவ மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு துரித தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், அதைத் தொடர்ந்து அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. காலி மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் ஒருங்கிணைப்புக் கூட்டத் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கூட்டங்களாக இவை அமைந்தன.
இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் போன்ற நிறுவனங்களால் மீனவ மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கருத்து தெரிவிக்கையில்,
தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தக் கூடாது.
கடற்றொழில் வளங்களின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் மீனவ மக்களின் வருமான மட்டத்தை மேம்படுத்துவதற்காக சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மீன் உற்பத்தியை அதிகரிப்பதும், ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக மீனவ மக்களை ஊக்குவிப்பதும் இந்தக் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் பிரதான நோக்கம் ஆகும்.
எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் நாட்டின் ஏனைய அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கடற்றொழில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட மட்டத்தில் பிரச்சினைகளை கண்டறிந்து, காலாண்டு தோறும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடத்தி, நாடு முழுவதிலுமுள்ள கடற்றொழில் துறையின் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்க்க அமைச்சும் திணைக்களமும் கடமைப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜினதாச, பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எச்.எஸ். ஹத்துருசிங்ஹ, இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் உள்ளிட்ட அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், கடலோர பாதுகாப்புப் படை, கடற்படை, இராணுவம், நீர்ப்பாசன திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மீனவ மக்கள், மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலானோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.