பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற ரீதியில் அரசியலமைப்புக்கு அமையவே செயற்பட்டுள்ளது.முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.பொலிஸ்மா அதிபர் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பிரச்சினை உள்ளவர்கள் நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரலாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
அத்துடன் பாராளுமன்றத்தின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியின் பதவியை வெற்றிடமாக்க வேண்டுமானால் அல்லது பதவியில் இருந்து நீக்குவதாயின் விசேட வழிமுறைகள் உள்ளன. அதன்படியே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற அமர்வின் போது பொலிஸ்மா அதிபர் தொடர்பாக உயர்நீதிமன்றதால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன நிகழ்த்திய விசேட உரையை தொடர்ந்து ஆளும் எதிர்கட்சிகளிடையில் ஏற்பட்ட தர்க்கத்தின்போது எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போது சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபாநாயகர் மேலும் அறிவித்ததாவது,
அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற ரீதியில் என்னால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் தற்போதைய நெருக்கடிகள்
ஏற்பட்டுள்ளதாக பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நான் அவ்வாறாக எந்தவொரு தவறான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்பதனை மீண்டும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்அரசியலமைப்புக்கமைய நன்கு சிந்தித்தே தீர்மானம் எடுக்கப்பட்டது. இது உங்களுக்கோ, வேறு ஒருவருக்கோ தவறாக தெரியலாம். ஆனால் நாங்கள் மனசாட்சிக்கு இணங்க அனைத்து விடயங்கள் தொடர்பிலும் சரியாக ஆராய்ந்து அரசியலமைப்புக்கமைய கலந்துரையாடல்களை நடத்தியே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதேவேளை நான் வீட்டில் இருந்து தீர்மானங்களை எடுத்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது . உங்களுக்கு வேண்டிய தர்க்கத்தை முன்வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் சரியாகவே தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
இந்நிலையில் தற்போது பொலிஸ்மா அதிபரின் கடமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் மற்றும் பாராளுமன்றத்தின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்டுள்ள குறித்த அதிகாரியின் பதவி மற்றும் பதவி நீக்கம் தொடர்பாக அரசியலமைப்பில் பிரத்தியேகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
இல்லையென்றால் அதனை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அங்கு இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டி வரும். இந்த இடத்தில் ஜனாதிபதியினாலும் தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை இருக்கிறது என்று கருதுகின்றேன். இது தவறு என்றால் நீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.