சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை வழங்குவதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற ஊழியர் பற்றாக்குறையால் பெரும்பாலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமை நேரங்களின் பின்னரும் கடமைகளில் ஈடுபடுவதற்கு நேரிடுகின்றமையால், அவர்களுக்கான விடுதி வசதிகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.

ஆயினும், அனைத்து சிறைச்சாலைகளிலும் போதியளவு விடுதி வசதிகள் இன்மையால், தற்போது காணப்படுகின்ற விடுதிகளை நவீனமயப்படுத்தல் மற்றும் இடவசதியுடன் கூடிய இடங்களில் புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டமாக முன்னுரிமையின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் கீழ்க்காணும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெலிக்கட சிறைச்சாலையின் இரண்டு விடுதிகளை நிர்மாணித்தல்

அநுராதபுரம் சிறைச்சாலையின் ஒரு விடுதியை நிர்மாணித்தல்

அனைத்து சிறைச்சாலைகளிலும் விடுதிகளை நவீனமயப்படுத்தல் மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்தல்