ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரை 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இன்று (01)வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்கு கடந்த மாதம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை  வெளியிட்டது.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும்;,இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில்  ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்  சஜித் பிரேமதாசவும்,தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில்  எஸ்.கே.பண்டாரநாயக்கவும்,தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும்,ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்ஸா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க,சரத் கீர்த்தி ரத்ன,கே.கே.பியதாஸ ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இவர்களில் விஜயதாஸ ராஜபக்ஷ,கே.கே.பியதாஸ,சிறிதுங்க ஜயசூரிய மற்றும் அஜந்த த சொய்ஸா ஆகியோர் நேற்று வியாழக்கிழமை  கட்டுப்பணம் செலுத்தியதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் போட்டியிட 08 வேட்பாளர்களும், சுயாதீனமாக போட்டியிட 02 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான  கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவும்,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.