ஜீவன் தொண்டமானை கைது செய்ய வேண்டாம் எனக் கோரி தலவாக்கலையில் வேலைநிறுத்தம்

ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை பிளான்டேசன் நிர்வாகத்துக்குட்பட்ட பெருந்தோட்ட  தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை (24) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான நாள் சம்பளமாக 1,700 ரூபாவை வழங்க மறுக்கும் களனிவெளி கம்பனியின் அடாவடித்தனத்தை கண்டித்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான  ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்தும் இவ்வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டக் கம்பனிகள் தமது தொழிற்சங்கத் தலைவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று காரணமின்றி கைது செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும், தமக்கு ஆதரவாக நின்ற தலைவரை அந்தக் குற்றச்சாட்டில் இருந்து நீக்குமாறு தோட்டக் கம்பனிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23)  கிறேட் வெஸ்டன், வட்டகொடை, ஹொலிரூட், பாமஸ்டன், ரதல்ல, சமர்செட், லோகி, கூம்மூட், மிடில்டன், கெல்சி மஹேலியா, டெஸ்போர்ட் ஆகிய  தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.