தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு எதிரான காவல் துறையின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும் இன்றி அவரது இளைய மகனை கைதுசெய்துள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்

சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி.

பருத்திதுறை பிரதேச சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எனினும் அது நிராகரிக்கப்பட்டது.

சில நாட்களிற்கு முன்னர் வேட்பாளருக்கான கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் மருதங்கேணி பொலிஸார் அவருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

எனினும் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை.

இன்று அவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் ஏன் அவர் அந்த கூட்டத்திற்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர் தான் தற்போது வேட்பாளர் இல்லை என பதிலளித்தவேளை பொலிஸார் அவரை நிந்தித்துள்ளனர் கூட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிக்கவேண்டு;ம் என தெரிவித்த அவர்கள் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் இளைய மகனை எந்த வித காரணமும் இன்றி கைதுசெய்துள்ளனர்.

சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார்.

அவரது கணவர் மகன் மற்றும் எங்கள் கட்சியின்  ஏனைய உறுப்பினர்களிற்கு எதிராக பொலிஸார் பலமுறை பொய்வழக்குகளை தாக்கல் செய்த பின்னர் விடுதலை செய்துள்ளனர்.