தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் பகுதியில் உள்ள தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று, எதையோ விழுங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் (22) தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் துப்புரவு செய்துகொண்டிருந்தபோது இந்த வெங்கணாந்தி பாம்பினைக் கண்டுள்ளார்.

எதையோ விழுங்கிய நிலையில், அசைய முடியாமல் அந்த பாம்பு தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்த உரிமையாளர், உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதையடுத்து, அவர்கள் குறித்த இடத்துக்குச் சென்று, பாம்பை பாதுகாப்பாக மீட்டு, வேறு பகுதியில் கொண்டுபோய் விட்டிருக்கின்றனர்.

தற்போது மழைக்காலம் நிலவுவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புறப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.