தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம், நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வெள்ளை ஈயினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதியில் இருந்து இரண்டு வார வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த உள்ளோம். அந்தவகையில் சாவாகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற 5 பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
மேற்குறித்த 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்குறித்த ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்தும் திரவக் கரைசலை விசிறவுள்ளோம். இதற்காக 200 விசிறும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஒரு இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 90 மரங்களுக்கு கரைசலை விசிற முடியும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுள்ளோம்.
இதனை முன்னெடுப்பதற்கு எமக்கு ஆளணிப் பற்றாக்குறை, உணவுப் பிரச்சினை, பணியில் ஈடுபடவுள்ளோருக்கான சம்பள கொடுப்பனவு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இந்த பணியினை தனியாக அரசாங்கமோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ செய்ய முடியாது. மக்களும் எங்களுடன் கை கோர்த்தால் மாத்திரமே இந்த பணிகளை முன்னெடுக்க முடியும்.
இந்த பணியில் பங்கெடுக்க விருப்புவோர் சுயாதீனமாக வந்து பிரதேசங்களை தாண்டியும் உங்களது பங்களிப்பை வழங்கலாம். அடுத்த வீட்டில் அல்லது அடுத்த பிரதேசத்தில் தானே வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளது, எமது பகுதியில் இல்லை தானே என்று எண்ணாதீர்கள். அது உங்களது பகுதியிலோ அல்லது உங்களது வீட்டிலோ உள்ள தென்னைகளையும் பாதிக்கலாம். எனவே இதனை ஒழிப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.





