யாழ். – சங்கானை அரசடி வைரவர் கோவில் வீதியில் விபத்து ; ஒருவர் பலி

யாழ்ப்பாணம், சங்கானை அரசடி வைரவர் ஆலய வளைவு வீதியில்  பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார்.

மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில்  இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்.

இதன்போது,  சங்கானை அரசடி வைரவர் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையில்  வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர்.

உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர்  மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன்  சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.