ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாக இருந்தால் தமிழர்கள் மாத்திரமே அவருக்கு வாக்களிப்பார்கள். அதுவும் எமக்கு சாதகமாகவே அமையும்.பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராக களமிறக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது என ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2022 ஆம் ஆண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் செயற்பட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் எவ்வாறு சுதந்திர கட்சியை பலப்படுத்தினாரோ, அவ்வாறு பொதுஜன பெரமுனவையும் பலவீனப்படுத்த முயற்சித்தார். நாங்கள் அதற்கு இடமளிக்கவில்லை.அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்கள் மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள்.இதற்கமைய பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கவில்லை.அவர் போட்டியிடுவதாக இருந்தால் தமிழர்கள் மாத்திரமே அவருக்கு வாக்களிப்பார்கள். அதுவும் எமக்கு சாதகமாக அமையும்.ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம் என்றார்.