வவுனியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் கைது!

வவுனியா நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கப் ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் வவுனியா விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமான வாகனத்தை வவுனியா ஹொரவப்பொத்தான வீதி 6ம் கட்டை பகுதியில் வைத்து வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் அந்த வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 15 மாடுகளை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் வாகனத்தில் பயணம் செய்த காட்டகஸ்கிரிய பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரனையின் பின்னர், வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.