வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (27) ரத்கம, பொலன்னறுவை, மாலம்பே மற்றும் ஜா – எல பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ரத்கம உடகம பிரதேசத்தில் மலைப்பாங்கான இடத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கதுருபே, புஸ்ஸ பிரதேசத்த்தை சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
இதேவேளை, பொலன்னறுவை கல்கொரிய சந்தியிலிருந்து கல்குவாரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 68 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மாலம்பே – ஹோகந்தர வீதியில் ஹோகந்தர பிரதேசத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த முச்சக்கரவண்டி பெண் ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த 70 வயதுடைய பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஜா-எல – மினுவாங்கொட வீதியில் வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.