ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.கட்சியின் பெரும்பான்மையான நிலைப்பாட்டுக்கு எதிரான தீர்மானத்தை எடுத்தால் கட்சி பிளவடையும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மஹிந்த ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ  தலைமையில் அக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில் பாரிய கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் நிறைவடைந்த நிலையில் பொதுஜன  பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று உறுதியாக குறிப்பிடும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்  ஏற்பாடு செய்த இந்த சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் முன்னிலை பாராளுமன்ற உறுப்பினர்களும்,இராஜாங்க அமைச்சர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டாமல் இருந்திருந்தால் இன்று  தனி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் எவரும்  வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்று சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டு சம்பவத்தையும் அதன் பின்னரான முன்னேற்றத்தையும் ஒருசிலர் மறந்து விட்டு நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை முன்வைக்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும்,பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுனவின் 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக உள்ளார்கள்.அதேபோல் பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் உறுப்பினர்களும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளார்கள் என்று சிரேஷ்ட  உறுப்பினர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பான்மை தீர்மானத்துக்கு எதிராக கட்சி  தீர்மானம் எடுத்தால் கட்சி பிளவடையும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஆணைக்குழு விடுத்ததன் பின்னர் கட்சியின் உத்தியோகபூர்வ  தீர்மானத்தை அறிவிப்பதாக கட்சி குறிப்பிட்டுள்ளது.முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கட்சி உரிய மதிப்பளிக்களிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்ப்புக்கு  முரணாக கட்சி தீர்மானம் எடுத்தால் அதற்கு எதிரான தீர்மானத்தை அறிவிக்க நேரிடும் என்று இச்சந்தர்ப்பத்தின் போது பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.