120 மில்லியன் டொலருக்கு மதிப்பிடப்பட்ட ஹில்டன் ஹோட்டலை 41.05 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 120 மில்லியன் டொலருக்கு மதிப்பிடப்பட்ட கொழும்பு ஹில்டன் ஹோட்டலை 41.05  மில்லியன் டொலருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிணைமுறி மோசடி இடம்பெறாமலிருந்திருந்தால் 2022 ஆம் ஆண்டு நாட்டில் எரிபொருள் வரிசை என்பதொன்று தோற்றம் பெற்றிருக்காது.

நாட்டை வங்குரோத்துக்கு நிலைக்கு தள்ளியவர்கள் உறக்கத்தில் இருந்து எழுந்ததை போன்று  பேசுகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25)  இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம்,அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளையும் சட்டமாக்க வேண்டியத் தேவை கிடையாது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு 16 தடவைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.வங்குரோத்துக்கு பின்னர் 17ஆவது தடவையாக ஒத்துழைப்பு  பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் .எரிபொருள் வரிசையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவுக்கு கொண்டு வந்தார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டார் என்று புகழ்பாடுகிறார்கள்.மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றதை மறந்து விடக் கூடாது.

பிணைமுறி மோசடி இடம்பெறாமலிருந்திருந்தால் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் வரிசை என்பதொன்று தோற்றம் பெற்றிருக்காது.பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள்  தமக்கும்,வங்குரோத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை போல் பேசுகிறார்கள்.

வங்குரோத்து நிலைக்கும் மத்தியில் ஊழல் முடிவுக்கு கொண்டு வரவில்லை.கொழும்பு ஹில்டன் ஹோட்டலை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹில்டன் ஹோட்டலின் மதிப்பு 120 மில்லியன் டொலர் என்று மதிப்பிடப்பட்டது.ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் செலவுகளுக்காக ஹில்டன் ஹோட்டலை 41.5 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அரசாங்கத்துக்கு இணக்கமானவரே ஹில்டன் ஹோட்டலை பெறவுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் வெளிப்படையாக செயற்பட வேண்டும் என்று  அரசாங்கம் நாட்டு மக்களுக்கு குறிப்பிடுகிறது.ஆனால் அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை.ஊழல் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றார்.