அரசியல்வாதிகளில் ‘ஈகோ’ – ஆவடியில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா திருமணம் மண்டபம்!

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு 29,497 சதுர அடி பரப்பளவில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 3 அடுக்​குகள் கொண்ட இந்த மண்டபத்​தின் முதல் தளத்​தில் நவீன சமையலறை வசதி​யுடன் 400 பேர்உணவருந்​தும் கூடமும், 2-ம் தளத்​தில் 700 பேர் அமரும் வகையில் குளிர்​சாதன வசதி​யுடன் கூடிய மணமேடை​யும், 3-ம் தளத்​தில் மணமகன், மணமகள் ஓய்வு அறை ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்ளன.

மேலும், இந்த மண்டபத்​தில் 75 நான்கு சக்கர வாகனங்​களும், 100 இருசக்கர வாகனங்​களும் நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்​துக்​குள் கண்காணிப்பு கேமராக்​கள், சூரியஒளி மின்​சாரம் தயாரிப்​ப​தற்கான வசதிகள் என தனியார் மண்டபத்​தையே மிஞ்​சும் அளவுக்கு வசதிகள் செய்​யப்​பட்​டுள்ளன. பொது​மக்கள் அனைவரும் நியாயமான கட்ட​ணத்​தில் திரு​மணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்​சிகளை நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கட்ட​ணமாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், மண்டபம் கட்டி முடிக்​கப்​பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்​கப்​படவில்லை. மேலும், இந்த மண்டபம் ஆவடி ரயில், பேருந்து நிலையம் மற்றும் மார்க்​கெட்டுக்கு அருகில் இருப்​ப​தால் பொது​மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஆனால், இது கடந்த அதிமுக ஆட்சி​யில் கட்டப்​பட்​ட​தால், தற்போதைய ஆட்சி​யாளர்​களின் ‘ஈகோ’ காரண​மாக​வும், அதிகாரிகளின் அலட்​சியம் காரண​மாக​வும் திருமண மண்டபத்தை திறக்​காமல் உள்ளதாக பொது​மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், திருமண மண்டபத்தை சுற்றி சில தனியார் மண்டபங்கள் உள்ளன. இதனால், அம்மா மண்டபத்தை திறந்​தால், அந்த தனியார் மண்டபங்​களின் வருமானம் பாதிக்​கும் என்ப​தா​லும் மண்டபத்தை திறக்​காமல் காலம் தாழ்த்து​வ​தாக​ குற்​றச்​சாட்டு எழுந்​துள்ளது. நிகழ்ச்​சிகள் ஏதும் நடைபெறாத​தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்​டுள்​ளதோடு, பொது​மக்​களுக்​கும் குறைந்த கட்ட​ணத்​தில் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்​சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்​டுள்​ளது.

நிகழ்ச்​சிகள் நடைபெறாத​தால் மண்டம் பராமரிப்​பின்றி பாழாகும் நிலை உருவாகி​யுள்​ளது. மேலும், அருகில் திடக்​கழிவு மேலாண்மை கிடங்​கில் பணிபுரி​யும் ஊழியர்கள் மற்றும் குப்​பைகளை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்​தும் பார்க்​கிங் இடமாக இந்த மண்டம் தற்போது பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. மண்டபத்தை திறக்​கக்​கோரி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உள்ளிட்ட பல்​வேறு ஊடகங்​களில் செய்தி வெளி​யாகி​யும் இதுவரை மண்​படத்தை ​திறக்​காமல் அதிகாரி​கள் அலட்​சி​யமாக உள்ளதாக அப்பகுதி மக்​கள் குற்​றம்​ சாட்​டினர்​.