விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மல்லக்கோட்டையில் தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இக்குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் முருகானந்தம் (49) ஆறுமுகம் (50) ஆண்டிச்சாமி (50) கணேசன் (43) வட மாநிலத் தொழிலாளி ஹர்ஜித் ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர் மைக்கேல் (43) மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார். கல் குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கும், காயமடைந்த தொழிலாளர் குடும்பத்துக்கும் தமிழக முதல்வர், நிவாரண நிதி வழங்கியுள்ளார். உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் 50 வயது, அதற்கும் குறைவான வயதுடையவர்கள். இவர்களது வருவாய் ஆதாரம் தான், அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பதை கருத்தில் கொண்டு, அறிவித்துள்ள நிவாரணத் தொகையை மேலும் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்துகள் ஏற்படும் போது உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண நிதி அறிவிப்பது ஆறுதல் அளிக்கும் என்றாலும், குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து, கண்காணித்து வரும் தொழிற்சாலை பாதுகாப்புப் பிரிவு படுதோல்வி அடைந்திருப்பதை, தொடர்ந்து வரும் விபத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
மணல், கல் குவாரிகள், பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் என அடர்த்தியான விபத்துகளுக்கான தொழிலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பூமிக்கு அடியில் 230 அடிக்கும் கீழே கற்களை வெட்டி எடுக்கக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், மல்லக்கோட்டை கல் குவாரியில் 450 அடிக்கும் மேல், கீழே இறங்கி வெடி வைக்கும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் அருகில் இருந்த குவாரியில் 350 அடிக்கும் கீழே ஆழத்தில் இறங்கி வேலை செய்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தார்கள். தொடரும் விபத்துக்களை தடுக்கவும், தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்கவும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தடை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு, தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.