விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாதா?

ஜூன் 30க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்பது வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ரேசன் அட்டையை அப்டேட் செய்யாவிட்டால் ரத்தாகிவிடும், ரேஷன் கார்டு மோசடியை தடுக்க ஏழை மக்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைக்க KYC சரி பார்ப்பது அவசியம் என்றும், ரேசன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் செல்லாது, ஆகவே இ- சேவை மையத்தில் KYC சரி பார்த்து அப்டேட் செய்யுங்கள் என்றும் இணையத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில் ஜூன் 30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்பது வெறும் வதந்தி என தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

டும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை எனவும், சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி உண்மை இல்லை என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.