கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா

உலகின் அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் ஈடில்லா சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. பண்டைய கிரேக்க நாட்டில் மதசடங்கு மற்றும் கடவுளின் புகழை பரப்பும் ஒரு விழாவாக உருவான ஒலிம்பிக் போட்டி, ரோமானியர்களின் படையெடுப்புகளால் நசுங்கிப் போனது.

அதன் பிறகு பல நூற்றாண்டுகளை கடந்து நவீன ஒலிம்பிக்காக 1896-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது தான் அதிகாரபூர்வ முதலாவது ஒலிம்பிக்காகும்.அதன் பிறகு ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. உலக போர் காரணமாக 3 முறை ஒலிம்பிக் போட்டி ரத்தானது. கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்க உள்ளது. மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தொடக்க விழாவை மைதானத்தில் இல்லாமல், பாரீசின் புகழ்பெற்ற சென் நதி கரையில் நடத்துகிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.இதையொட்டி அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவின் சிறப்பு அம்சமே வீரர், வீராங்கனைகளின் கம்பீர அணிவகுப்பு தான். அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடத்தப்படுகிறது.

இதற்காக ஏறக்குறைய 94 படகுகள் தயார் நிலையில் உள்ளன.வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையில் தேசிய கொடியுடன் படகில் அணிவகுத்து நிற்பார்கள். முதல் நாடாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் அணிவகுப்பை தொடங்கும். கடைசி நாடாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியினர் உற்சாகமாக வலம் வருவார்கள். அகர வரிசைப்படி அணிவகுப்பில் இந்தியாவுக்கு 84-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.நமது அணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

இந்திய வீராங்கனைகள் சேலை உடுத்தி செல்ல இருப்பது கூடுதல் சிறப்பாகும். படகு அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் சென்று பான்ட் டி லெனா பாலத்தில் நிறைவடைகிறது. போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

தொடர் ஓட்டமாக எடுத்து வரப்படும் தீபம் மெகா கொப்பரையில் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி விடும்.முதல் நாளில் எந்த விளையாட்டும் கிடையாது. மறுநாளில் இருந்து போட்டிகள் தொடங்கும். இந்த ஒலிம்பிக் திருவிழாவில், இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், வில்வித்தை, ஆக்கி உள்பட 16 விளையாட்டுகளில் 117 வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள்.

கடந்த ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற இந்தியா இந்த முறை அதை விட கூடுதலாக பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.