கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டை சுற்றியுள்ள கடல் பரப்புகளில் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளதால், கடற்படையினருக்கும் மீனவ சமூகத்திற்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (09) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (10) புதன்கிழமை முற்பகல் 10:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இங்கு காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோ மீற்றர் வரை மிக பலத்த காற்றாக வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறு அறிவித்தல் வரும் வரை கடல் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இந்த குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கல்பட்டியிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். இங்கு காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இக்கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடும் கடலில் பயணம் செய்வோருக்கு மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்