மன்னார் நகர சபையின் 2026 – வரவு செலவுத் திட்டம் மேலதிக 4 வாக்குகளால் நிறைவேற்றம்

மன்னார் நகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக 4 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவு  செய்யப்பட்டுள்ளதோடு 2 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

மன்னார் நகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சபை முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இன்றைய தினம்  திங்கட்கிழமை (17) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வரவு – செலவுத் திட்டம் வாசிக்கப்பட்ட நிலையில்  சில உறுப்பினர்களால் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் மேலதிகமாக 4 வாக்குகளினால் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

வாக்களிப்பு நிறைவில், இத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் மான் சின்னத்திலான தமிழ் மக்கள் கூட்டணியின் இரு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்த நிலையில், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் உரை நிகழ்த்துகையில்,

மன்னார் நகர சபையின் தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது மக்கள் பிரதிநிதிகள் சபையின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நகர சபை  மக்களுக்கு சேவையை மேம்படுத்துதல், அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றுதல் மற்றும் நகர சபையின் நிதி சமநிலையைப் பேணுதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மன்னார் நகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டு அடுத்த வருட நிதி செயற்பாடுகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நகர பொது மக்களுக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது என்ற செய்தியை வழங்குவதில் மன்னார் நகரசபை தலைவரும், மன்னார் மக்கள் பிரதிநிதியும் என்ற வகையில் பெருமிதம் அடைகிறேன்.

அந்த வகையில் எமது நகர சபையின் நோக்கங்கள் செயற்பணிகள் என்ற ரீதியில் அனைத்து வாழ்வாதார வசதிகளுடன் தூய்மையான எழில்மிகு வளமான பிரதேசத்தை உருவாக்கி நகராட்சி மன்றத்தின் சேவையின் அதி உச்ச பயனை நகர மக்கள் பெற கூடியவாறு சுகாதார சேவைகள், கட்டடம், வீதிகள், வடிகாலமைப்பு போன்ற பௌதீக அபிவிருத்தியை நோக்கிய பௌதீக திட்டமிடல் சேவைகள், தண்ணீர் சேவைகள் பொது பயன்பாட்டு சேவைகள், நலன்புரி சேவைகள் மற்றும் மிக அவசியமான திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் தீயணைப்பு போன்ற சேவைகளை, சேவையின் தேவை கருதி விரைவாகவும், வினைத்திறனுடன் வழங்குவது எமது பிரதான கடமையாகும்.

இத்தகைய நோக்கங்களை அடையும் வகையில் இந்த வரவு செலவு திட்டத்தை  வருடத்தில் கிடைக்கப்பெறவுள்ள சபையின் சொந்த வருமானம் 183.57 மில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற தண்டம், முத்திரை தீர்வை, ஏனைய வருமான கொடைகள் அடிப்படையாகக் கொண்டு 2026ஆம் ஆண்டு எமது சபையின் எல்லைக்குட்பட்ட ஏழு வட்டாரங்களில் உள்ள 15 கிராம அலுவலர் பிரிவுகளில் நடாத்தப்பட்ட மக்கள் பங்களிப்புடன் அபிவிருத்தித் திட்டங்களை இனங்காணும் நிகழ்வுகள் மூலம் பெறப்பட்ட மக்களின் முன்னுரிமைத் தேவைகளான வீதியமைப்பு, வடிகாலமைப்பு, சந்தைக்கடை தொகுதி, சிறுவர் பூங்கா, பொது நூலக புனரமைப்பு, வீதி மின்விளக்கு, சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தல், குளங்களை பராமரித்தல் போன்ற பொதுமக்கள் மற்றும் கௌரவ சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட தேவைகள் முன்னுரிமை அடிப்படையில் உள்ளீர்க்கப்பட்டு எமது நகர சபை சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்படுத்தும் வண்ணம் இந்த வரவு செலவு திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் சொந்த வருமானம் 183.57 மில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டின் வாடகை மற்றும் குத்தகை வருமானமாக 76.32 மில்லியனும் , ஆதன வரி வருமானமாக 16.5 மில்லியனும் சேவைக் கட்டணமாக 7.72 மில்லியனும் வியாபார உரிமம் மூலமாக 4.01மில்லியன் ரூபாவும் நீதிமன்ற தண்டம் மற்றும்  ஏனைய தண்டமாக 10.59 மில்லியன் மற்றும் முத்திரைத் தீர்வை என்பன உள்ளடங்கலாக ஏனைய வருமானம் ரூபா 51.86 மில்லியன் ரூபாவும் மூலதன பெறுகைகளாக 16.6 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப்பெறும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்பாட்டின் பிரதான செல வீனங்களான வாகன எரிபொருள், வாகன திருத்தம், அமைய சுத்திகரிப்பு தொழிலாளர் மற்றும் சாரதி சம்பளம் என்பவற்றிற்கு 32.34 மில்லியன் கனிசமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இயற்கை உரம் தயாரிப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் குப்பைகளை தரம் பிரித்து பெற்று திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சேகரித்து வைத்து இயந்திரங்களூடாக இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கான செலவினங்களும் அதன் வருமானமும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவு 40 வீதமானது 2026இல் மீள் நிரப்பப்படாத நிலை காணப்படுவதால் இவை சபையின் சொந்த வருமானத்தில் இருந்து செலுத்தப்படும்.

ஆனபோதிலும் மக்களின் நலன் மற்றும் நகர அபிவிருத்திக்கு எவ்வித பாதிப்பும் இன்றி மூலதன வேலைத்திட்டங்களுக்காக சொந்த வருமானத்திலிருந்து 63.6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 6 மில்லியன் ரூபாய் மாகாண குறித்தொதுக்கப்பட்ட  அபிவிருத்தி நன்கொடைக்கான மூலதன கொடைகளாக பெறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மொத்த வருமானமாக 250.972 மில்லியன் ரூபாவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக செலவீனமாக 62.026 மில்லியன் ரூபாவும், சுகாதார சேவைக்கான செலவீனமாக 74.64 மில்லியன் ரூபாவும், உருப்படித் திட்டமிடல் செலவினங்களுக்காக 81.77 மில்லியன் ரூபாவும், நீர் வழங்கல் சேவைக்காக 12.96 மில்லியன் ரூபாவும், பொதுப் பயனுறு சேவைக்காக 6 மில்லியன் ரூபாவும், நலன்புரிச் சேவைக்காக 13.55 மில்லியன் ரூபாவும், மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மொத்த மீண்டெழும் செலவீனம் 181.371 மில்லியன் ரூபாவும் மூலதனச் செலவீனம் 69.6 மில்லியன் ரூபாவும் உள்ளடங்கலாக மொத்த செலவீனம் 250.971 மில்லியன் ரூபாவும் ஆகும்.

மேலும் 2026ஆம் ஆண்டு சபை நிதியில் இருந்து இரட்டை தொகுதி வட்டாரங்களான உப்புக்குளம் மற்றும் எழுத்தூர் வட்டாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 20 மில்லியன் தொகையும், ஏனைய 05 வட்டாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 10 மில்லியன் தொகையும் ஆக மொத்தம் 90 மில்லியன் தொகைக்கு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வேலைத் திட்டங்களுக்கான நிதியானது 2026ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலமும், 2025ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கத்தின் மூலமும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

மேலும் 2026ஆம் ஆண்டின் இவ்வரவு – செலவுத் திட்டமானது மக்களின் பங்களிப்புடனானதாகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகவும் செலவீனங்களை கட்டுப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமையும் என்ற எனது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கூறிக் கொள்வதுடன் இவ்வரவு செலவுத் திட்டத்தை உரிய காலத்தில் தயாரித்து சபையின்  அனுமதியை பெறுவதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்  நன்றியை கூறிக்கொண்டு 2026ஆம் ஆண்டில் நடைமுறைச் செயற்பாட்டில் மக்கள் பங்களிப்புடன் இணைந்த வகையில் இவ்வரவு – செலவு திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை சமர்ப்பிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.