உயர்கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழியை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை, தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அனைத்து பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றில் இப்போது கற்பிக்கப்படும் இரு மொழிகளுடன், மூன்றாவதாக ஒரு மொழி கண்டிப்பாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் மொழியாக உள்ளூர் மொழியும், 2-ம் மொழியாக ஆங்கிலமும் கற்பிக்கப்படும் நிலையில், 3-ம் மொழியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் விரும்பினால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். அம்மாணவர்களுக்கு தமிழக அரசு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால், மாணவர்களின் விருப்பம் இல்லாமல், எந்தவொரு மொழியும் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது.
பல்கலைக்கழக மானியக் குழு ஆணையின் மூலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்க மத்திய அரசு முயல்வது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழியை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை, தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.





