சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நாளை முதல் சேவைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, நேற்று அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 38 விமானங்கள், வெளியூர்களில் இருந்து வரும் 33 விமானங்கள் என மொத்தம் 71 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் பெரும்பாலானோர், விமான டிக்கெட்களை ரத்து செய்து, வேறு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
டிக்கெட்களை ரத்து செய்யும்போது, அவர்களது வங்கிக்கணக்குக்கு பணம் உடனடியாக வந்துவிடும் என்று கூறப்பட்டாலும், பணம் வருவதற்கு தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, விமானம் ரத்தால் அவதிப்படும் நிலையில், ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு பணமும் உடனே கிடைக்காததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை (டிச.10) முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்படுவது குறைக்கப்பட்டு, சேவைகள் அதிகரிக்கும். 15-ம் தேதி முதல் வழக்கமான சேவை தொடங்கும் என்று கூறப்படுகிறது.





