ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் சமூக வலைத்தளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டங்களை அமுல்படுத்தியது. அவை பின்பற்றப்பட வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) வலைத்தளம் அந்த விதிகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஆணையம் பல மாதங்களாக விசாரணை நடத்தியது.
விதிமுறைகளை மீறியதற்காக, எக்ஸ் நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ, அதாவது இலங்கை பண மதிப்பில் சுமார் ரூ.4,140 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள், பயனர்களை தவறாக வழிநடத்தும் ஏமாற்றும் வடிவமைப்புகள் (Deceptive Designs), விசாரணைக்குத் தேவையான தகவல்களை வழங்க மறுத்தல் ஆகியவற்றின் காரணமாக இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அபராதங்களில் இதுவும் ஒன்றாகும்.





