களுபோவில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்!

கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுபோவில பிரதேசத்திற்கு நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “படோவிட்ட அசங்க”வின் தரப்பினரின் தலைமையில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கடையானது பாதாள உலக கும்பலை சேர்ந்த  “துபாய் அவிஷ்க ” என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“துபாய் அவிஷ்க ” என்பவர் பாதாள உலக கும்பலை சேர்ந்த  “கொஸ் மல்லி“ என்பவருடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.

“கொஸ் மல்லி“ மற்றும் “படோவிட்ட அசங்க” ஆகியோருக்கிடையில் நிலவி வரும் முன்விரோதம் காரணமாக “துபாய் அவிஷ்க ” வின் நெருங்கிய உறவினருக்குச் சொந்தமான கடை மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.