அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீட்புரம் சந்தியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இருவரை சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சடந்தலாவை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரும் மஜீட்புரம், மல்வத்தை 03 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மஜீட்புரம் சந்தியில் கடமையிலிருந்த வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டபோது சந்தேக நபர்களுக்கு 35,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.