தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார்

ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவின்  (UNOPS)  தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் சார்லஸ் கெலனன், சிறிலங்கா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலத்தில் வைத்து சந்தித்தார்.

சந்திப்பில் பல்வேறு அபிவிருத்தி துறைகளில் ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் முக்கியமான பல துறைகளை டிஜிட்டல்மயமாக்குதல், நிர்வாகத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் விநியோக சவால்களுக்கு தீர்வு காணல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அணுகல் மற்றும் செயற்திறனை மேம்படுத்தி டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

சுகாதார சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற்கு காணப்படும் திறனை எடுத்துக்காட்டி, இந்த முயற்சிகளுக்கு UNOPS இன் ஆதரவை பெற்றுக்கொடுப்பதாக கெலனன் அவர்கள் இதன்போது உறுதியளித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவு வழங்கும் பங்களிப்புகளுக்கு கலாநிதி அமரசூரிய தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் மனித உரிமைகள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சுபாசினி சில்வா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.