நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக நிர்ணயுங்கள்!

பெரும்போக விவசாய விளைச்சல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை. இம்முறை ஒருகிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 140 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என விவசாய ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையிலும் நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. இறுதி கட்டத்தில் மிகவும் குறைந்த அளவில் விலை நிர்ணயிக்கப்படும்.

அச்சந்தர்ப்பத்தில் மாற்று வழியேதும் இல்லாத காரணத்தால் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விநியோகிக்க நேரிடும்.

மறுபுறம் பிரதான அரிசி உற்பத்தியாளர்களின் மாபியாக்களுக்கும் விவசாயிகள் அகப்பட வேண்டிய நிலை ஏற்படும். அறுவடையின் பெரும்பாலான பங்கை பிரதான வர்த்தகர்கள் கொள்வனவு செய்து அரிசியின் விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். இதனால் சந்தையில் அரிசி விலை உயர்வடையும், நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். இவையனைத்தையும் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்வனவு செய்வதற்கும், சிறந்த உத்தரவாத விலையை தீர்மானிப்பதற்கும் இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இந்த அரசாங்கமும் பேச்சளவில் திட்டங்களை குறிப்பிடுகிறதே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய அறிமுகப்படுத்திய சேதன பசளைத் திட்டத்தாலும், இயற்கை அனர்த்தங்களாலும் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.

பொருளாதார நெருக்கடியினாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் குறிப்பிட்டதைப் போன்று நிவாரணம் முறையாக கிடைக்கப் பெறவில்லை. ஆகவே ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என்றார்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 முதல் 150 ரூபா வரை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினர் விவசாயத்துறை அமைச்சுக்கு முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் கமத்தொழில் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.யூ.குணரத்ன குறிப்பிடுகையில், நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயித்தால் 18 இலட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் ஆனால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயித்தால் ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலை 330 ரூபாவாகவும், சம்பா அரிசியின் விலை 360 ரூபாவாகவும், கீரி சம்பா அரிசியின் விலை 420 ரூபா வரை உயர்வடையும். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வர்த்தகர்கள் அவற்றை பின்பற்றுவதில்லை. நடைமுறையில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டுப்பாட்டு விலைக்கு மாறாகவே அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காமல் விவசாயிகளுக்கு உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்கி,ஒருகிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 முதல் 105 ரூபாய் வரை நிர்ணயித்தால் அரிசியின் விலையை 180 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை நிர்ணயிக்க முடியும். அப்போது தான் விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்