வடக்கு ஆளுநருக்கும் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்று  வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடினர்.

மேலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அதில் தலையீடுகள் இருக்கின்றன எனவும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

பாடசாலைகளில் பரீட்சைக்கு மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், வேறு சில மாகாணங்கள் பரீட்சைக்கு நிதி ஒதுக்குகின்றமையை சுட்டிக்காட்டி அந்த நடைமுறையை பின்பற்றுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அதைச் சாதகமாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சின் செயலருக்கு ஆளுநர் பணித்தார்.

மேலும், பாடசாலைகள் மற்றும் கல்விப்புலத்திலுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆளுநருடன் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.