கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் பெருமளவிலான தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
21 T-56 ரக தோட்டாக்கள் மற்றும் MPMG ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் 33 தோட்டாக்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் மேலதிகமாக, 9MM பிஸ்டல் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெற்றுத் தோட்டாக்கள் 118, ஒரு புகைக் குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) மாலை 4.30 மணியளவில் ஹுருளுவெவவில் குளிப்பதற்காக வந்த இரு இளைஞர்கள் இந்த தோட்டாக்களை கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, அந்த இரண்டு இளைஞர்களும் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த இடத்தை சோதனையிட்டு இந்த தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





