மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடம் மாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி இன்று வியாழக்கிழமை (2) மாணவர்கள், அப்பாடசாலையின் முன்கதவை பூட்டி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எவரையும் உட்செல்லவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாடசாலையில் தரம் 11க்கு கல்வி கற்பித்துவந்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேவேளை அதிபருக்கு ஆதரவாக இருக்கும் சிலரால் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த பாடங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகிறது.
அத்துடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிமனையின் கவனத்துக்கு கொண்டுவந்தும் இதுவரை தீர்வு பெற்றுத்தரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலய கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்து குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை வலயக்கல்வி பணிப்பாளர் நியமித்து தரும் வரை பாடசாலை கதவை திறக்க முடியாது என மாணவர்கள் சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காலை 7 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து, இந்த போராட்ட இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அத்துடன், பாடசாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளரிடம் கலந்துரையாடி, குழு ஒன்றை அமைத்து, விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று மாணவர்களை சந்தித்தார்.
இதன்போது, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு, இப்பிரச்சினைக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபர் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னரே மாணவர்கள் பாடசாலையின் வாயிற்கதவைத் திறந்து, வலயக்கல்வி பணிப்பாளர் உட்செல்ல அனுமதித்தனர்.
இதையடுத்து கல்வி பணிப்பாளர் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து, கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பாடசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வண்ணம், அதிபரை தற்காலிகமாக அப்பாடசாலையிலிருந்து வலயக் கல்வி அலுவலகத்திற்கு மாற்றுவதுடன், அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரை, பாடசாலைக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பொறுப்பாக பணியமர்த்த தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் நாளை முதல் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் வழமை போல நடைபெறும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.





