துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் கனேமுல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட இருவேறு விசேட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கொஸ்ஹின்ன, பரகந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த துப்பாக்கிகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் மீட்கபட்டு இருந்ததுடன் இதன்போது 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன் அங்கிருந்து ரிபெட்டர் ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், ரி-56 ரக துப்பாக்கியின் 9 மேகசின்கள், 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 22 கிராம் 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20, 22, 23 மற்றும் 28 வயதுடைய இராஜகிரிய, பொரளை, மாலம்பே, ஓபயசேகரபுர, கடுலந்தவத்த மற்றும் மொரட்டுகஸ்முல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் துப்பாக்கிகள் போதைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், இராணுவ சீருடை, 6 கைத்தொலைபேசிகள், ரி-56 ரக துப்பாக்கிக்கான மற்றும் 183 தோட்டாக்கள், 9 மில்லி மீட்டர் துப்பாக்கி அதற்கு பயன்படுத்தப்படும் 280 தோட்டாக்கள், 300 போதை மாத்திரைகள், ஒரு கைவிலங்கு, 3 கடவுச்சீட்டுக்கள், 2 இலத்தினியல் தராசுகள், 128 கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் தளுபன, கடான, கதிரான, மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராக கருதப்படும் ”கெஹெல்பத்தர பத்கமகேவின்” நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் கம்பஹாவுக்கு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





