ஹஜ் பதிவு செய்தோர் கடவுச்சீட்டுகளை நேரடியாக முகவர்களிடம் வழங்க வேண்டும் – ரியாஸ் மிஹுலார்

அடுத்த வருடம் ஹஜ் கடமைக்கு செல்ல பதிவு செய்துள்ளவர்கள் தங்களின் கடவுசீீட்டுக்களை தரகர்களிடம் கொடுக்காமல் நீங்கள் விரும்பிய ஹஜ் முகவர்களிடம் நேரடியாக கொடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். அதேநேரம் அமானா வங்கியில் 7இலட்சத்தி 50ஆயிரம் ரூபா வைப்பில் வைத்திருப்பவர்களுக்கு ஹஜ் பயணத்துக்கான வாய்ப்பு உறுதியாகும் என ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் தெரிவித்தார்.

அடுத்த வருடத்துக்கான புனித ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு  முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அடுத்த வருட ஹஜ் கடமைக்காக இலங்கையருக்கு 3,500 கோட்டா கிடைத்திருக்கிறது. இது அதிகரிக்கப்பட மாட்டாது. இந்த 3,500 பேரையும் கடந்த வருடம் போல மினாவில் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

இலங்கையருக்கு வலயம் 2 பீ தரத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இம்முறை வீஐபி பக்கேஜுகள் கிடையாது. யாரும் அதற்காக அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை.

3,500 ஹாஜிகளையும் அழைத்துச் செல்வதற்காக 93 ஹஜ் முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் பெயர்ப்பட்டியல் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

70 புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 75 பேரை அழைத்துச் செல்ல முடியும். 60 புள்ளிகளைப் பெற்றவர்கள் 50 பேரை அழைத்துச் செல்ல முடியும். ஹாஜிகள் தமது தெரிவுக்கேற்ற வகையில் முகவர்களை தேர்ந்தெடுக்க முடியும்.

இந்த முறை ஹஜ் முகவர்களுக்கு முன்கூட்டியே  கோட்டாக்கள் வழங்கப்படுவதில்லை.இந்த முறையினால் கட்டணத்தில் போட்டித் தன்மை ஏற்பட்டு ஹாஜிகளுக்கான கட்டணம் 20 இலட்சத்தை விடக் குறையும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட  முகவர்கள் அல்லாத வேறு தரகர்களிடம் கடவுச்சீட்டுக்களை வழங்கி ஏமாற வேண்டாம் என ஹஜ்ஜுக்கு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஹாஜிகள் சிறப்பாக ஹஜ்ஜை நிறைவேற்றும் வகையில் வசதிகள் அமைய வேண்டும் என்பதற்காக முகவர்களிடம் நாம் நிபந்தனைகளை விதித்திருக்கின்றோம்.

மக்காவில் தங்க வைப்பதென்றால் அது மூன்று நட்சத்திர ஹோட்டலாகவும் ஹரத்துக்கு 1 கிலோ மீட்டர் தூரத்துக்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

மதீனாவில் குறைந்தது 4 நட்சத்திர ஹோட்டலாகவும் ஹரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குட்பட்டதாகவும் அமைய வேண்டும். அஸீஸியாவில் தங்குவதென்றால் குறைந்தது 2 நட்சத்திர ஹோட்டலாக அது இருக்க வேண்டும் என்பதோடு தங்குகின்ற நாட்கள் 6 இரவுகலாக இருக்க வேண்டும். போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யும் பஸ்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் பழையதாக இருக்கக் கூடாது.

மேலும் 2026 ஹஜ்ஜுக்காக சவூதி ஹஜ் அமைச்சு பல சுகாதார விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிவுறுத்துவதற்காக ஹஜ் தூதுக் குழுவில் ஒரு வைத்தியரையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்கள் ஒரு வைத்தியரையும் குழுவில் இணைத்திருக்கிறோம்.அதனால் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் கட்டாயம் வைத்திய சான்றிதல் வைத்திருப்பது கட்டாயமாகும்.

மினா, அரபாவில் ஹாஜிகள் தங்குவதற்கான இடங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு சவூதி ஹஜ் அமைச்சு வேண்டிக் கொண்டுள்ளது.

ஹாஜிகளுக்கென ஒதுக்குகின்ற வலயங்களை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஹோட்டல், போக்குவரத்துக்கான பஸ்கள் அனைத்தையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

இம்மாதம் 23 ஆம் திகதி முன்பதிவுகள் ஆரம்பித்தவுடனேயே நாங்கள் முன்பதிவு செய்து கொண்டால் ஹாஜிகளுக்கு வசதியானவாறு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதற்கென 2 பில்லியன் ரூபா இலங்கை ஹஜ்ஜாஜிகள் சார்பில் ஆரம்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த கட்டணத்தை செலுத்த அமானா வங்கி இணங்கி இருக்கிறது.

அதனால் தான் 2026 இல் ஹஜ் செய்ய நாடியிருப்பவர்களிடம் 7இலட்சத்தி 50ஆயிரம் ரூபாவை அமானா வங்கியில் தங்களின் பெயரில் வங்கி கணக்கொன்றை திறந்து வைப்பிலிடுமாறு வேண்டிக் கொண்டோம்.

இதுவரை 1,500 பேருக்கும் அதிகமானவர்கள் வைப்பிலிட்டிருக்கிறார்கள்.  750,000 ரூபா வைப்பிட்டுள்ளவர்களுக்கு ஹஜ் வாய்ப்பு உறுதியாகும். அடுத்தவர்களும் அவசரமாக இந்தத் தொகையை வைப்பிலிடுமாறு வேண்டிக் கொள்கிறோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ், ஹஜ் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் வை.எல்.எம் நவவி, சட்டத்தரணி டீ.கே.அஸூர், பேராசிரியர் அஸ்லம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.