‘புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால், தனது பெயர், புகைப்படத்தை தன்னார்வலர்கள் பயன்படுத்த வேண்டாம்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நமது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்த பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்த பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும்.
நான் முன்பே கூறியிருந்ததை போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.
மேலும், மாவட்டவாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட் டுள்ளன. இது முறையான செயல் அல்ல. அந்த இயக்கங்களுக்கும், நமது இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஏற்கெனவே, அண்ணாமலை அன்புக்கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம்.
ஆனால், தொடர்ந்து இதுபோன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்துக்குரியது. எனவே, எனது பெயரை பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் http://wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.



