அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி காங்கிரஸ் அவையின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 அமெரிக்க டொலர் (சுமார் $1.35 டிரில்லியன் செலவில்) "ட்ரம்ப் டிவிடெண்ட்" (Trump dividend) என்று பெயரிடப்பட்டுள்ள நிதி உதவி வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.நேற்று புதன்கிழமை (9) டெக்சாஸில் உள்ள டாலஸ் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் முதலாவது இடைத்தேர்தல் மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், வாக்காளர்களைக் கவர இந்த அறிவிப்பை வெளியிட்டார். "நான் தேர்தலில் போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு வாக்களியுங்கள்" என்றும் அவர் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.“குடியரசுக் கட்சியினருக்கு வாக்களியுங்கள்; வரும் தலைமுறைகளுக்கு இந்த உலகையே நாம் நமக்குப் பின்னால் விட்டுச் செல்வோம்” என்றும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிதி உதவித் திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படும் அல்லது இதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து தெளிவான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சுமார் 27 கோடி (270 million) அமெரிக்கர்களுக்கு  இந்தத் தொகையை வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் ஈரான் போர் குறித்த மக்களின் அதிருப்திக்கு மத்தியில், ட்ரம்பின் இந்த உரை வாக்காளர்களை எந்தளவுக்குக் கவரும் என்பதும் அமெரிக்காவில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.