ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில் வாராந்திர சேவைகளை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 2026 ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் கொழும்பு – மெல்போர்ன் நகருக்கு இடையே வாரத்திற்கு 10 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக சுற்றுலா, குடும்ப உறவினர்களைச் சந்திக்கும் பயணங்கள் போன்ற தேவைகள் உயர்ந்து வருவதால் இந்த சேவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் முக்கிய சந்தைகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிதாக சேவையில் இணைக்கப்பட்ட விமானங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.
கொழும்பிலிருந்து புறப்படும் நேரம்: பிற்பகல் 2.10 மணி
மெல்போர்னை அடையும் நேரம்: அடுத்த நாள் அதிகாலை 4.30 மணி
அடுத்து மெல்போர்னிலிருந்து விமானங்கள் புறப்படும் நேரம்: காலை 6.00 மணி
கொழும்பை வந்தடையும் நேரம்: நண்பகல் 12.15 மணி ஆகும்.
இந்த பயண நேர அட்டவணை சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் அதிக நேரம் செலவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு வழியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கான இணைப்பு பயணங்களுக்கும் வசதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவைகளுடன் சேர்த்து, ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் தினசரி விமான சேவைகளும் தொடரும்.
UL604 விமானம் – கொழும்பில் இருந்து அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு மெல்போர்னில் பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும்.
UL605 விமானம் மெல்போர்னிலிருந்து பிற்பகல் 4.10 மணிக்கு புறப்பட்டு கொழும்பை இரவு 10.25 மணிக்கு வந்தடையும்.
இந்த சேவைகள் இந்தியா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எளிதான இணைப்பு பயணங்களை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினருக்கும் இந்த சேவை விரிவாக்கம் பெரும் நன்மையாக அமையும். குடும்பத்தினரை சந்திக்க இலங்கைக்கு வருவதற்கும் மீண்டும் திரும்பிச் செல்வதற்கும் அதிக வசதி கிடைக்கும்.
மேலும், அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கும் இந்த கூடுதல் விமான சேவைகள் பயனுள்ளதாக இருக்கும். கல்வி அட்டவணைகள் மற்றும் விடுமுறை காலங்களை கருத்திற்கொண்டு பயணத்தை எளிதாக திட்டமிடுவதற்கு இது உதவும்.
இந்த கூடுதல் சேவைகள் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் பிராந்திய விமான மையமாக மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் கொழும்பு வழியாக மெல்போர்ன் செல்வதற்கான வசதிகள் மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையே விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தீரமானம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space