இன அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் - சுவிஸ்
Ad Space
Ad Space
Ad Space
சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினேழாவது ஆண்டிலும் ‘எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.14.09.2026 திங்கள் அன்று பிற்பகல் 14:30 மணியளவில், சுவிஸ் நாட்டின் ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இக் கவனயீர்ப்புப் பேரணியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படத்தினை உணர்வாளர்கள் கைகளில் தாங்கியவாறு முன்செல்ல, அதன் பின்னால் செம்மணி மனிதப் புதைகுழி சார்ந்து ஊர்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வெளிப்பாட்டினைத் தொடர்ந்து தமிழ் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உரத்தகுரலில் தமது உரிமைக்குரல்களை ஒலித்ததோடு மட்டுமன்றி, தாங்கிய பதாதைகள் மூலம் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்புசார்ந்த வெளிப்பாடுகளை எடுத்துரைத்த வண்ணமிருந்தனர். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற கோசத்துடன் ஐ.நா முன்றிலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலைச் சென்றடைந்தனர்.தொடர்ந்து பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், தியாக தீபம் லெப். கேணல் திலீபன், ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன் உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாக அமைந்ததுடன், தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் அவர்களால் பேச்சுக்கள் வழங்கப்பட்டதுடன், இவ் ஒன்றுகூடலிற்கான பிரகடனமும் வாசிக்கப்பட்டது.தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும், தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இவ் ஒன்றுகூடலில், பிரித்தானிய நாட்டின் பிரதமர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐ.நா நோக்கிப் பயணித்த மனிதநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் சார்ந்தும் வலியுறுத்திப் பேசப்பட்டது.கலந்து கொண்டிருந்த இனஉணர்வாளர்கள் தமிழீழம் என்ற தேசம்தான் தங்கள் வாழ்வை வளமாக்கும் என்பதிலே உறுதி கொண்டிருந்ததோடு, சிங்களப் பேரினவாத அரசினால் அரங்கேற்றி வருகின்ற தமிழின அழிப்பினை உலக அரங்கில் முன்வைத்து, எமக்கான நீதியும், இறைமையும் கொண்ட தமிழீழத் தேசம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன், தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் இக் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுபெற்றது.சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
Ad Space
Ad Space
Ad Space