கண்டி - தலத்துவோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை (8) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலத்துவோயா பொலிஸ் தெரிவித்துள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், பவ்லானா கிராமத்தை சேர்ந்த முதியன்செலகே சாந்த சஞ்சய பண்டார (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தனது அண்ணனை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், அவரது தம்பி தலத்துவோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனையடுத்து அவர் கடைசியாக சந்தித்த இரண்டு நண்பர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்த கொலை குறித்த தகவலை பொலிஸ் கண்டறிந்துள்ளது.மது அருந்திவிட்டு தங்கள் நண்பரை கொலை செய்த பின்னர், உடலை எரித்து வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, சவப்பெட்டியில் வைத்து வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்று (8) நீதித்துறை விசாரணை நடைபெற உள்ளது.இச்சம்பவம் குறித்து தலத்துவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.