கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை கன்னியாவுக்கு  ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் செய்து அங்கு இடம் பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் பார்வையிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் சில வருடங்களுக்கு முன்னதாக பிரச்சினைகள் இருந்தது அனைவருக்கும் தெரியும் அங்கிருந்த பிள்ளையார் கோயிலை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தபோது அது தடுக்கப்பட்டதும் கோயில் இருந்த மேடையில் பௌத்த கொடி நாட்டப்பட்டு தொல்லியல் திணைக்களத்தினால் எவ்வித கட்டுமாணமும் செய்ய முடியாது என்று சொல்லியும் விகாரை ஒன்றை கட்டுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டதும் ஒரு விடயம் 2019ல் இடம் பெற்றது.

அந்த வேலையில் நாங்கள் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து அந்த நிலத்துக்கு சொந்தமான திருகோணமலையில் உள்ள  இன்னொரு கோயில் உரிமையாளரான கோகிலாரமணி என்கின்ற அம்மையார்.

அவருக்கு நீதிமன்றில் நான் ஆஜராகி இடைக்கால தடை ஒன்றும் பெறப்பட்டிருந்தது. கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதற்காக இறுதியில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பான சில நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்திய போது அதில் பண்டைய விகாரை இருந்ததாக அடையாளங்கண்டிருந்தார்கள்.

பிள்ளையார் கோயில் 150 வருடங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இருந்தது. ஆனால் 2000ம் ஆண்டுக்கு முன்னதாக விகாரை இருந்ததாகவும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது. பண்டைய விகாரை அங்கு இருந்திருந்தால் அதனை பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு தொல்லியல் திணைக்களத்துக்கு இருக்கிறது.

ஆனால் மீள கட்டுமாணம் எதுவும் செய்ய முடியாது. ஆகவே பேணிப்பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் செய்யலாம் அதேவேலையில் 150வருடங்களாக பிள்ளையார் கோயில் அங்கு இருந்ததன் காரணமாக அந்த இடத்தில் இனொரு அளவீடு செய்யப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டு அதில் பிள்ளையார் கோயில் மீளவும் கட்டலாம் என நீதிமன்றத்தில் இணக்கப்பாட்டோடு குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது. அந்த இணக்கப்பாட்டுக்கு மாறாக அந்த நடவடிக்கைக்கு முரணாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

குறித்த காணியின் உரிமையாளர் ரமணி அம்மா இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக இருந்த அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். நானும் இன்று காலை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் அவர்களுடன் சென்று அதனை பார்வையிட்டேன்.

அந்த மேட்டில் அதாவது பண்டைய விகாரை இருந்ததாக சொல்லப்படும் மேட்டினை பேணிப்பாதுகாப்பதற்கு மேலதிகமாக வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

ஆகவே இவ் விடயம் சம்மந்தமாக நீதிமன்றத்தின் இணக்கப்பாட்டுக்கு மாறாக தொல்பொருள் திணைக்கள அனுமதியோடு நடைபெறுவதன் காரணமாக நீதிமன்றுக்கு இதனை தெரியப்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம்.இந்த வழக்கில் பிரசண்ணமாகிய சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமாரும் இங்கு இருக்கிறார். எனவே இணக்கப்பாட்டுக்கு மாறாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என்றார்.