எதிர்வரும் 26 ஆம் திகதி வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த சந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.  எதிர்வரும் 26ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடுக்குநாறிமலை பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.குறித்த இரு தரப்பும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதால், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான மோதல்கள் ஏற்படுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி காரணங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று மாலை 2.30மணிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.