இன்று காலை நாட்டிற்கு ஒரு குறுகிய பயணமாக வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக வெளிவிவகார அமைச்சர்  விஜித்த ஹேரத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில்,

அமைச்சர் வாங் யீயை வரவேற்று, டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணத்திற்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது.


இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்ட வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீன அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தக் கோரிக்கையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிடுவதாக அமைச்சர் வாங் யி உறுதியளித்தார். இலங்கை விரைவான மீட்சிக்கான சரியான பாதையில் உள்ளது என்றும், அந்த நோக்கத்திற்காக சீன அரசாங்கம் அதன் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.