கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் இல்லாத ரசிகர்கள்,  டிக்கெட் பெறும் நோக்கத்தில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சுற்றித்திரிய வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

போட்டியை பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடத்துவதற்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்வையிட வரவுள்ள ரசிகர்கள், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தல்களை மைதானத்திற்குள் கொண்டு வருவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் கொண்டு வராமல் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

போட்டியை அமைதியானதும் பாதுகாப்பானதுமான சூழலில் நடத்துவதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.