இலங்கையில் அரச ஊழியர்களைத் தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களும் தங்களது புகையிரத பருவச் சீட்டுகளை (Season Tickets) இணையதளம் ஊடாக மிக இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான புதிய டிஜிட்டல் சேவை முறை செவ்வாய்க்கிழமை (08) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,இத்தகைய டிஜிட்டல் மயமாக்கல் வசதிகள் உண்மையில் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், தற்போதைய ஜனாதிபதியின் தொலைநோக்கு வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்துத் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த காலங்களில் இயற்கை அழிவுகள் அல்லது எதிர்பாராத ரத்து நடவடிக்கைகள் காரணமாக ரயில் பாதைகள் பாதிக்கப்படும்போது, ரயில்களில் பயணிக்கும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் துல்லியமான புள்ளிவிபரங்கள் புகையிரத திணைக்களத்திடம் இல்லாத சூழல் நிலவியது. இதனால் அவர்களுக்கு மாற்றுப் பேருந்து வசதிகளை ஒழுங்கு செய்து கொடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒன்லைன் பருவச் சீட்டு முறையானது, பயணிகளின் துல்லியமான தரவுகளைச் சேகரிக்க உதவுவதோடு, எதிர்காலத்தில் போக்குவரத்துத் துறையை மேலும் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும் வலுவான அடித்தளமாக அமையும்.இதுவரை காலம் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்களது மாதாந்திர பருவச் சீட்டுகளைப் பெறுவதற்காகத் தனிநேரம் ஒதுக்கி, நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வந்தனர். இனி அந்தச் சிரமங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்தபடியே மிக விரைவாக ஒன்லைன் மூலம் பருவச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சேவை அமைப்பில் சுமார் 80 சதவீதக்கும் அதிகமான சேவைகளை டிஜிட்டல் அமைச்சகத்தின் ஊடாக பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பெறும் நிலையை எதிர்வரும் ஆண்டுகளில் உருவாக்குவதே அரசின் பிரதான இலக்காகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஒன்லைன் புகையிரத பருவச் சீட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தடையின்றிச் செயல்பட டிஜிட்டல் அமைச்சு, புகையிரத திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு முழு ஒத்துழைப்பு வழங்கியதுள்ளது என்றார்.