தமிழ் மக்கள் இந்த நாட்டில் அரசியல் அபிலாசையுடன் கூடிய அரசியல் தீர்வையும் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளுடனும் வாழவே போராடுகின்றார்கள். ஆனால் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் போலவே ஆட்சியிலுள்ள அரசாங்கமும் எமது மக்களை ஏமாற்றியும் அடக்கியும் வருகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  தெரிவித்தார்.ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தீர்வுகள் கட்டாத நிலையில் நீதி கோரி சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும், அரசாங்கம் மக்களாட்சியை நடைமுறைப்படுத்திவிட்டதாக தன்னைத் தானே புகழ்ந்து பெருமிதம் கொள்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் இந்த அரசாங்கமும் ஏனைய கடந்த கால ஆட்சியாளர்களைப் போலவே செயற்படுகின்றனர்.தமிழர் தாயகத்தில் இன்றும் எமது தாய்மார்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கோரி போராடி வருகின்றார்கள். அவர்களுக்கான நீதியை வழங்குவதற்குப் பதிலாக கபடத்தனமாக பாதிக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டங்களை அரச திணைக்களங்களைப் பயன்படுத்தி மடைமாற்றம் செய்யப்பார்க்கின்றனர். மேலும், இராணுவத்தினரின் பிடியில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு தேர்தலுக்கு முன்னர் அரசியல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது போன்று எதைம் செய்யவில்லை.இராணுவத்தினர் விடயத்தில் அரசாங்கம் இராணுவத்திற்குக் கட்டுப்பட்டே உள்ளது. சாதாரணமாக நிர்வாகச்சட்டங்கங்கள், நிர்வாக ஒழுங்கு விதிகள் அனைத்தும் இராணுவ மயமாக்கத்தின் முன் அடக்கி வாசிக்கப்படவேண்டிய ஒன்றாகவே உள்ளது. இது பாரதூரமான ஜனநாயக விரோதமாகும்.  ஆட்சியில் உள்ள ஆட்சியாளர்கள் தமது ஆட்சியில் நிதி மோசடிகள் மற்றும் ஊழல் விடயங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கின்றனர். அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் இவ்விடத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல் விடயங்களில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை. இப்படியான ஓர் நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களில் நடைமுறையில் உள்ள இந்த அரசாங்கமும் காலந்தாழ்த்தும் முயற்சிகளிலேயே ஈடுபடுகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்   தெரிவித்தார்.