நமது நாட்டில் நீதி நியாயத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து நமது மக்களுக்கு சேவை செய்யும் முறைமை தற்போது இல்லாமல் செய்யப்பட்டு, அரசியல் ரீதியாக பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளவர்கள் மாத்திரம் நமது பாராளுமன்ற உறுப்பினர்களாக வரக்கூடிய புதிய முறைமை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் ஆளும் கட்சியினர் எதிர்காலத்தில் பெரும் கோடீஸ்வரர்கள் மாத்திரம் நாடாளுமன்றம் வரக்கூடிய வகையில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமா லெப்பை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இ்வ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக முழுமையாக பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் என கூறினீர்கள். 01 வருடம் சென்றநிலையிலும் அந்த வாக்குறுதி இன்றும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்,உரிய காலத்தில் தேர்தல் நட த்தப்படும் நமது நாட்டில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இவைகள் நிறைவேற்றப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை ஆளும் கட்சியினருக்கு நினைவுபடுத்துகிறேன்.
வடக்கு,கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் மக்கள் முன்னாள் அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வேதனையால் தான் இந்த தடவை அநுர குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தார்கள். நமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற வேண்டும் என்றநோக்கத்தில் தான் ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சியினருக்கும் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ ஒன்றரை வருடத்தினை நிறைவு செய்யப் போகின்றது. வடக்கு,கிழக்கு மாகாண சமூகங்களுக்கான அரசியல் தீர்வினை இதுவரை நீங்கள் முன்வைக்கவில்லை. நீங்களும் முன்னாள் அரசியல் தலைவர்களைப் போல் வடக்கு,கிழக்கு மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணாமல் விட்டால் அந்த மக்கள் ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கை வீணாக்கப்பட்டு விடும்.
நாட்டின் 78வது சுதந்திர தினம் கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது. நாங்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டோம். கடந்த 30 வருட காலயுத்தத்தின் போது வடக்கு,கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதனை புறக்கணித்து இருந்தனர். 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த போதிலும் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்பதற்காக நமது நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கரி நாளாக பிரகடனப்படுத்தும் நிலைமை உருவானது. எனவே இந்த நிலைமைகளை உங்களது ஆளுங்கட்சியினால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெரும் கோடீஸ்வர்களே வரக்கூடிய புதிய முறைமை – உதுமா லெப்பை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space