“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
தான் ஒரு பௌத்தர் என்பதையும், பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல என்றும் அவர் கூறினார்.
“இந்த நாட்டில் பெரும்பான்மை பௌத்த மக்கள் வாழ்கிறார்கள். நாங்கள் சிங்கள பௌத்தர்கள். அதனால் பௌத்த தர்மத்திற்காகவும், பௌத்த கலாசாரத்திற்காகவும் நிற்பது தவறு அல்ல. அதே நேரத்தில், இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும், அனைத்து கலாசாரங்களையும் பாதுகாக்க நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்” என அவர் வலியுறுத்தினார்.
இந்த நாடு பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நாடாக இருந்தாலும், அதுவே அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் திறன் கொண்டது என்றும், அதனால் தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நான் சிங்களன், நான் பௌத்தன். அதே சமயம், பிற மொழிகள், மதங்கள், கலாசாரங்களையும் பாதுகாக்க நான் செயல்படுகிறேன். ஒருவர் தன் மதத்தையும் கலாசாரத்தையும் நம்பினால்தான் மற்றவர்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
“தன் அடையாளம், தன் நாடு, தன் இனம், தன் மதம் ஆகியவற்றை மறந்து முன்னேற முடியும் என்று யாராவது நினைத்தால், அவருக்கு உண்மையான அடையாளம் இருக்காது. முதலில் ‘நான் யார்’ என்பதை ஏற்றுக்கொண்டு, அதில் நம்பிக்கை கொண்டால்தான் மற்றவர்களை பாதுகாக்க முடியும். தன் மதத்தை தைரியமாக வெளிப்படுத்தும் மனஉறுதி இல்லாதவர், பிற மதங்களை ஒருபோதும் பாதுகாக்க மாட்டார்” என்றார்.
தன்னை பௌத்தர்களுக்காகவும், நாட்டுக்காகவும் குரல் கொடுப்பதை இனவாதமாக கூறுவது தவறு என்றும், தான் இனவாதி அல்ல என்றும் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
அரசாங்கத்தை விமர்சித்த அவர்,
“தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். என்னை சிறையில் அடைத்து தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா, அல்லது வெளியே வைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா என்பதையும் அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த இரண்டுக்கிடையில் குழப்பத்தில் இருந்து என்னை குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எது நடந்தாலும் எனக்கு அது ஒன்றுதான்” என்றார்.
மக்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்களின் தேவைகள் அடிப்படையில் தீர்மானம் எடுப்பார்கள்; JVPயின் தேவைகளின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
எரிபொருள் விலை உயர்வு, வாழ்வாதார செலவுகள் அதிகரிப்பு, கடலில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், உர மானியம் வழங்கப்படாமை, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சரை விமர்சித்த அவர்,
“டிக் டொக் பார்க்கும் வேலையை நிறுத்தி, மருத்துவர்களின் பிரச்சினைகளையும் மருந்து பற்றாக்குறையையும் கவனிக்க வேண்டும். நோயாளிகள் பெரும் அவலத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களில் நேரம் கழிப்பதைவிட சுகாதாரத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இறுதியாக, “இந்த நாட்டில் உண்மையான தலைவர்களின் பற்றாக்குறை உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இறுதியில் மக்கள் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இல்லையெனில், தலைமை இல்லாத பொம்மை அரசியல் உருவாகும் அபாயம் உள்ளது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” என்கிறார் நாமல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space