வவுனியா - ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்குரிய அணைக்கட்டை அமைப்பதுடன், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடியவிரைவில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு குறித்த புல்மோட்டை வெளிக்குரிய அணைக்கட்டை அமைக்கவும், நீர்ப்பாசன வாய்க்காலைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென வவுனியா பிரதேசசெயலாளர் மற்றும் ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பின்கீழுள்ள புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டு அமைக்கவும், நீர்ப்பாசன வாய்க்காலை சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இது தொடர்பில் பெரியவிளாத்திக்குளம் கமக்கார்அமைப்பினரால் என்னிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பில் உரியவர்கள் கவனஞ்செலுத்தவேண்டுமென வலியுறுத்தினார்.
இந்நிலையில் குறித்த அணைக்கட்டு அமைப்பது தொடர்பாகவோ, நீர்ப்பாசன வாய்க்காலை அமைப்பது தொடர்பிலோ தமக்கு எவ்வித கோரிக்கைகளும் கிடைக்கவில்லை என இதன்போது பிரதேசசெயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு குறித்த அணைக்கட்டு மற்றும் வாய்க்காலை அமைக்கவேண்டிய தேவை இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், எனினும் கமக்கார அமைப்புக்களால் தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
கமக்கார அமைப்பு தங்களிடம் கோரிக்கை முன்வைக்காவிட்டாலும் என்னிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர் எனவே குறித்த புல்மோட்டை வெளிக்குரிய அணைக்கட்டையும், நீர்ப்பாசன வாய்க்காலையும் அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்தினார்.
அதற்கமைய உரிய திட்டங்களானூடாக உள்வாங்கி மிகவிரைவாக குறித்த அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்கால் என்பவற்றை அமைப்பதற்கு தம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வவுனியா பிரதேசசெயலாளர் மற்றும் ஓமந்தை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்ப்பாசன வாய்க்காலை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space